பிரிவினைவாத இயக்க தலைவர் மசாரத் ஆலம் உட்பட அரசியல் கைதிகளை விடுவித்தது காஷ்மீர் அரசு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பிரிவினைவாத இயக்க தலைவர் மசாரத் ஆலம் உட்பட அரசியல் கைதிகள் பலரையும் விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் சிறைகளில் இருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த பிரிவினைவாத இயக்க தலைவர்களில் ஒருவரான 44 வயதான மசாரத் ஆலமும் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கும் போராட்டத்தை தூண்டி விட்டதாக மசாரத் ஆலமை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில், 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டு பாரமுல்லா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முப்தி முகமது சயீத் பிறப்பித்த உத்தரவால் நேற்று மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார்.
மசாரத் ஆலத்தை விடுதலை செய்ததற்கு பாரதிய ஜனதா கட்சிகடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாரதிய ஜனதா சார்பில் போராட்டமும் நடைபெற்றது. இதுபற்றி காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா இளைஞர் அணியின் தலைவரும், நவ்ஷேரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவீந்தர் ரெய்னா கூறுகையில், மசாரத் ஆலம் அரசியல் கைதி அல்ல என்றும் அவர் ஒரு தீவிரவாதி என்பதால் அவரது விடுதலை தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், அவரை விடுவித்ததை பாரதிய ஜனதா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்று தேச விரோதிகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டால், கூட்டணி அரசை நடத்திச் செல்வது மிகுந்த சிரமம் ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே மசாரத் ஆலம் விடுதலை விவகாரத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.