வயதைக் காரணம் காட்டி ஓரம் கட்டுவதா.. காங்கிரஸை உதறித் தள்ளினார் எஸ்.எம்.கிருஷ்ணா
எனது வயதைக் காரணம் காட்சி கட்சியில்ஓரம் கட்டுவதை ஏற்க முடியவில்லை என்று கூறியுள்ளார் காங்கிரஸிலிருந்து விலகி விட்ட எஸ்.எம்.கிருஷ்ணா.
பெங்களூரு: தனது வயதைக் காரணம் காட்டி கட்சியில் தன்னை ஓரம் கட்டியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கட்சியை விட்டு விலகுகிறேன் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் முக்கியத் தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணா. முன்னாள் முதல்வராக இருந்தவர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். ஒக்கலிகா சமுதாயத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவர் இவர்.
கடந்த 46 வருடமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த கிருஷ்ணா தற்போது காங்கிரஸை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தனது விலகலைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தான் விலகியது குறித்து விவரித்தார் கிருஷ்ணா. பேட்டியின்போது அவர் கூறியதாவது:
சோனியா காந்தி மீது மரியாதை
சோனியா காந்தி மீது நான் பெரும் மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனக்கு அவர் அளித்த மரியாதை, கெளரவத்தை நான் மறக்க மாட்டேன். ஆனால் எனது வயதைக் காரணம் காட்சி கட்சியில் என்னை ஒதுக்கியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
வயதானால் என்ன
எனக்கு வயது ஆகி விட்டதை வைத்து கட்சியில் ஒரம் கட்டிய செயல் ஏற்க முடியாதது. கட்சியின் தீவிரமான தொண்டராகத்தான் என்னை எப்போதும் நான் பார்க்கிறேன். அப்படித்தான் செயல்படுகிறேன். இந்த செயல் காரணமாகவே நான் காங்கிரஸை விட்டு விலகும் முடிவுக்கு வந்தேன்.
மக்கள் தலைவரை மதிக்காத கர்நாடக காங்.
மக்களின் அன்பைப் பெற்ற ஒரு தலைவரை மாநில காங்கிரஸ் தலைமை மதிக்காதது, அங்கீகரிக்காதது வருத்தம் தருகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் யாரிடமும் பழிவாங்கும் போக்கில் நடந்து கொள்ளக் கூடாது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அரசியல்வாதிகள் ஒரு போதும் ஓய்வு பெறுவதில்லை. அவர்களுக்கு ஓய்வே கிடையாது.
எனக்கு உடம்பு சரியில்லைதான்
எனக்கு உடம்பு சரியில்லைதான். வயது ஆகி விட்டதுதான். ஆனால் அதை வைத்துக் கொண்டு கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைப்பது என்பதை ஏற்க முடியாது. மத்திய தலைமையிலிருந்தும், மாநிலத் தலைவர்கள் சிலரும் தொடர்ந்து என்னுடன் பேசிக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.
பல தொகுதிகளை உருவாக்கியவர்
எஸ்.எம்.கிருஷ்ணாதான், மைசூரு பிராந்தியத்தில் பல சட்டசபைத் தொகுதிகள் உருவாக முக்கியக் காரணமாக அமைந்தவர். இவரால்தான் மைசூரு பகுதியில் காங்கிரஸ் வலுவான நிலையை எட்டவும் முடிந்தது. ஒக்கலிகா சமுதாயத்தின் முக்கியத் தலைவராகவும் திகழ்ந்தவர். 1999 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு நல்ல வெற்றியை தேடித் தந்தவர்.