குடும்ப அமைதியைக் குலைத்த ஸ்மார்ட் போன்.. கூலிப்படை வைத்து மனைவியைத் தீர்த்துக் கட்டிய கணவர்
ஜான்சி, உ.பி.: 5 காசுக்காக கொலை நடந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் உ.பி மாநிலம் ஜான்சியில் ஒரு ஸ்மார்ட் போன் லாக் "கோட்" எண்ணை மறைத்ததற்காக தனது மனைவியை ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டார் ஒரு கணவர்.
பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் பெயர் பூனம் வர்மா. ஆகஸ்ட் 29ம் தேதி இந்தக் கொலை நடந்துள்ளது. இவரைக் கொலை செய்தது கணவர் வினீத் குமார் திவாகர் ஏவிய அவரது நண்பர்கள்.
நடந்தது இதுதான்...!
திவாகருக்கு தனது மனைவியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் வந்துள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசி வருவதும், செல்போனை கையிலேயே வைத்திருப்பதும் அவரை குழப்பியது. இதையடுத்து சம்பவத்தன்று மனைவியின் ஸ்மார்ட் போனை எடுத்து அதில் உள்ளதைப் பார்க்க முயன்றார் திவாகர். ஆனால் போனை லாக் செய்திருந்தார் பூனம். இதையடுத்து அன்லாக் செய்வதற்காக லாக் கோட் எண்ணைக் கேட்டுள்ளார் திவாகர். ஆனால் அது என் போன், எனது பெர்சனல், லாக் கோடைச் சொல்ல முடியாது என்று கூறி மறுத்துள்ளார் பூனம்.
இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்போதைக்கு அமைதியாகி விட்டார் திவாகர். அடுத்த நாள் அவர் கான்பூர் போய் விட்டார். அங்கிருந்து தனது மனைவிக்குப் போன் செய்து எனது நண்பர்கள் இருவர் வருவர். அவர்களிடம் எனது பெர்சனல் கம்ப்யூட்டரை கொடுத்து அனுப்பு என்று கூறியுள்ளார்.
அதன்படி அன்று இரவு திவாகரின் நண்பர்கள் லட்சுமண் மற்றும் கமல் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து பூனமை அவரது பெட்ரூமில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் நகை, பணத்தை எடுத்துக் கொண்டும், அந்த அறையை சூறையாடி விட்டும், திருட்டும், கொலையும் நடந்தது போல செட்டப் செய்து விட்டு போய் விட்டனர். இந்தக் கொலைக்காக அவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்துள்ளார் திவாகர்.
அடுத்த நாள் காலை கண் விழித்தெழுந்த பூனத்தின் 4 வயதுக் குழந்தை தனது தாயார் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தோர் வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வினீத் குமார் திவாகரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிக்கினார். விசாரணையின்போது அவர் கூறுகையில் ஸ்மார்ட் போன்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அது இல்லாதவரை எனது மனைவி நன்றாகத்தான் இருந்தார். அது வந்த பிறகு மாறி விட்டார். தனது போனில் ரகசியங்களை அவர் பாதுகாத்து வந்தார். அதை அறிய முயன்றபோதுதான் இந்த விபரீதமே நடந்தது என்றார் திவாகர்.