நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன்
உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.
உபியில் அதிர்ச்சி
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொடுத்து கணவன் மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் காவல்நிலையத்திற்கு வெளியில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நீண்ட நேரம் அழுதபடியே அமர்ந்திருந்தார்.
அதிர்ச்சியில் ஆழ்த்தியது
இதையடுத்து போலீசார் அவரிடம் என்ன நடந்தது என கேட்டனர். அதற்கு அவர் கூறிய பதில் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2 வயதில் பெண் குழந்தை
அதாவது அந்த பெண்ணுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
நடத்தையில் சந்தேகம்
இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பாலியல் தொழில்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு வெளியே ஒருவரிடம் தனது மனைவியை பாலியல் தொழிலுக்கு விற்பதாக பேசியுள்ளார் அவரது கணவன்.
இரவு உணவு தயார்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இரவு உணவு தயார் செய்ய சென்றுவிட்டார்.
மனைவிக்கு மொட்டை
இந்நிலையில் இரவு மனைவிக்கு தூக்க மாத்திரையை கொடுத்துள்ளார் அவரது கணவர். மனைவி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றபின் தனது தம்பியை வரவழைத்து இரண்டு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு மொட்டை அடித்துள்ளனர்.
தலைமறைவான கணவன்
மனைவியின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் கணவனே மனைவிக்கு மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.