உ.பியில் பாம்பு கடிக்கு சாணம் பூசி மருத்துவம் பார்த்த கணவர்.. சாமியாரால் மனைவியை இழந்த கொடூரம்
உத்தர பிரதேசத்தில் பாம்பு கடிக்கு மருத்துவம் பார்க்காமல் சாணி குவியலுக்குள் பெண் ஒருவர் படுக்க வைக்கப்பட்டதால் அந்த பெண் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாம்பு கடிக்கு மருத்துவம் பார்க்காமல் சாணி குவியலுக்குள் பெண் ஒருவர் படுக்க வைக்கப்பட்டதால் அந்த பெண் பரிதாபமாக பலியாகி உள்ளார். அந்த பெண்ணின் கணவரே இதற்கு காரணமாக இருந்துள்ளார்.
நம் நாட்டில் நாளுக்கு நாள் அறிவியல் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் பல மூட நம்பிக்கைகளும், பழக்கங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. மூட நம்பிக்கைகளுக்கு பல உதாரணம் சொல்லலாம்.
இன்னார் முகத்தில் முழித்தால் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பதும், பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்று நினைப்பதும், காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதும், புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது என வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.
நடந்தது என்ன
மூட நம்பிக்கைகளுக்கு உச்சகட்டமாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் வருந்தத்தக்க ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் டிவேன்ட்ரி. 35 வயது நிறைந்த இவர் தன் கணவருடன் புலந்துஸார் என்ற இடத்தில் வசித்து வந்தார். தன் வீட்டு சமையல் வேலைக்காக விறகு எடுக்க சென்ற இவரை, விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.
ஏன் இப்படி
இதை அறிந்த அந்த பெண் தன் கணவரிடம் சொல்ல நினைத்து வீட்டுக்கு வேகமாக விரைந்தார். மனைவி சொன்ன செய்தி கேட்டு அதிரிச்சி அடைந்த கணவர், மருத்துவமனை அழைத்து செல்லாமல் பாம்பாட்டி ஒருவரை அழைத்து வந்துள்ளார். அவரிடம் விஷத்தை எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் அந்த பாம்பாட்டி சொன்ன அறிவுரையின் பெயரில் செயல்பட்டுள்ளார்.
என்ன ஆனது
மாட்டு சாணத்தை தன் மனைவியின் உடல் முழுவதும் பூசியுள்ளார். இப்படி செய்தது மட்டும் அல்லாமல், அந்த பாம்பாட்டி மந்திரம் மூலம் குணப்படுத்துவதாக சொல்லி இருக்கிறார்., அதை அப்படியே நம்பி ஏமாந்த கணவன் கடைசி வரை மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. அப்படி நேரம் கடந்துள்ளது.
பூஜை செய்தனர்
அதேபோல் மந்திரம் செய்யவும் காத்திருந்துள்ளார். அந்த பெண் பாம்பு கடிபட்டு, சாணி குவியலுக்குள் கிடந்துள்ளார். இதனால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். அந்த கணவன் தன் மனைவியை பறிகொடுத்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூட நம்பிக்கைகள் இன்னும் நம் நாடு மக்களிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவைகளை என்று நாம் களைகிறோமோ அன்று தான் நம் நாட்டு மக்கள் அனைவரும் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வது உறுதி