குருநாத் மெய்யப்பன் குறித்த ஹஸ்ஸியின் கட்டுரை... பயபுள்ள தப்பா எழுதிருச்சாம்!
டெல்லி: குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உண்மையிலே நிர்வகித்து வந்தவர் என்று தனது சுயசரிதையில் தான் எழுதியது தப்பு என்று சிக்ஸர் அடித்துள்ளார் சென்னை அணியின் மைக்கேல் ஹஸ்ஸி.
சில நாட்களுக்கு முன்புதான் குருநாத் மெய்யப்பன்தான் உண்மையான சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனர் என்று சுயசரிதையில் கூறியிருந்தார் ஹஸ்ஸி..
ஆனால் தற்போது அப்படி தான் எழுதியது தவறு, தவறாக எழுதி விட்டேன் என்று பல்டி அடித்து விட்டார் ஹஸ்ஸி.
"Underneath The Southern Cross"
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான ஹஸ்ஸி. இவர் "Underneath The Southern Cross" என்ற பெயரில் ஒரு சுயசரிதை எழுதியுள்ளார்.
குருவை அதிகம் பார்த்துள்ளேன்...
ஆனால் தற்போது அது தவறு என்று பின்வாங்கியுள்ளார் ஹஸ்ஸி. இதுகுறித்து அவர் கூறுகையில், நிச்சயம் அணியின் நடவடிக்கைகளில் குருவை அதிகம் பார்க்க முடிந்தது. அவர் 2008ம்ஆண்டுஅணியின் பயிற்சியாளராக இருந்த கெப்ளர் வெஸ்ஸல்ஸுடன் பேசியதைப் பார்த்துள்ளேன், அறிந்துள்ளேன். வீரர்களுடனும் அவர் பேசியுள்ளார். பயிற்சியின்போதும் ஹோட்டலில் பார்த்துள்ளேன்.
ஆனால் நான் எழுதியது தவறு...
இருப்பினும் அவரது அதிகாரப்பூர்வ பதவி குறித்து எனக்குத் தெரியவில்லை. எனக்கு அதில் தெளிவில்லை. எனவே நான்எழுதியது தவறாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் ஹஸ்ஸி.
அணிக்கு நெருக்கமானவர்தான்
குருநாத் மெய்யப்பன் அணியுடன் நெருக்கமாக இருந்தார். அதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவரது உண்மையான பொறுப்பு குறித்து எனக்குத் தெளிவில்லை. அவர்தான் அணியை நிர்வகித்து வந்தார் என்று நினைத்து விட்டேன். ஆனால் அது தவறாக இருக்கலாம் என்றும் விளக்கியுள்ளார் ஹஸ்ஸி.
சீனிகிட்ட ஸாரி சொல்லிட்டேன்
மேலும் ஹஸ்ஸி கூறுகையில், நான் சீனிவாசனை சந்தித்து எனது கட்டுரை குறித்து விளக்கி மன்னிப்பும் கேட்டு விட்டேன். அணியின் டின்னர் விருந்தின்போது சீனிவாசனை சந்தித்துப் பேசிஎனது நிலையை விளக்கி விட்டேன்.
பரவாயில்லை விடுங்க என்றார்...
அதற்கு அவர் பரவாயில்லை, விடுங்க, ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறினார். மேலும், சர்ச்சைகளுக்கு முன்பு எழுதப்பட்டவை இது என்றும், அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் சொன்னார் என்றார் ஹஸ்ஸி.
அணியில் நீடிப்பேன்...
நான் ஒரு வேளை சென்னை அணிக்காக விளையாடுவதிலிருந்து நின்றாலும் கூட ஏதாவது ஒரு வகையில் இந்த அணியுடன் தொடர்பில் இருப்பேன் என்று நம்புகிறேன்.
அருமையான அணி
சென்னை அணி அருமையான அணி. இந்த அணியின் அனைத்துத் தரப்பினருடனும் எனக்கு நல்லுறவு உள்ளது.
நல்ல அனுபவம் கிடைத்தது
சென்னை அணியின் வீரராக எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனது கிரிக்கெட் ஆட்டத்தை அனுபவித்து ஆடினேன். தொடர்ந்து இந்த அணியில் நீடிக்க விரும்புகிறேன் என்றார் ஹஸ்ஸி.