சீருடை அணியாத சிறுமியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த ஹைதராபாத் பள்ளி
சீருடை அணிந்து வராத காரணத்தால் சிறுமியை ஆண்கள் கழிவறையில் ஹைதராபாத் பள்ளி நிர்வாகம் நிற்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: சீருடை அணிந்து வராததால் சிறுமியை ஆண்கள் கழிப்பறையில் நிற்க வைத்த கொடூரம் ஹைதராபாத்தில் ஒரு பள்ளியில் அரங்கேறியது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராமசந்திரபுரத்தில் உள்ளது ராவ் உயர்நிலைப் பள்ளி, இங்கு 5-ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் அவரது சீருடையை துவைக்க போட்டுவிட்டதால் அந்த தினம் மாணவி சீருடை அணியாமல் சென்றிருந்தார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்திய உடற்கல்வி ஆசிரியர் மாணவியை நிறுத்தி சீருடை குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் துவைக்க போட்டுள்ளதை கூறியதோடு பள்ளி டைரியில் பெற்றோர் எழுதிய குறிப்பையும் காட்டியுள்ளார்.
எனினும் அதை கண்டுகொள்ளாமல் கத்திக் கொண்டே மாணவியை தரதரவென ஆண்கள் கழிப்பறைக்குள் இழுத்து சென்று அங்கேயே நிற்க வேண்டும் என கூறிவிட்டார். மாணவியின் இந்த நிலையை பார்த்த 4-ஆம் வகுப்பு மாணவர்கள், இந்த மாணவியை பார்த்து சிரித்துள்ளனர்.
Told teacher my mother washed uniform & parents mentioned in the diary.Still She took me to boys' toilet. Don't want to go to school:Victim pic.twitter.com/TusobFXLdb
— ANI (@ANI) September 10, 2017
இதைத் தொடர்ந்து மாணவியிடம் இனி இதுபோல் சீருடை அணியாமல் வரக் கூடாது என்று அந்த ஆசிரியை எச்சரிக்கை விடுத்து வகுப்புக்கு அனுப்பியுள்ளார். இவர் கொடுத்த தண்டனை குறித்து சக ஆசிரியர்களிடமும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால் இனி பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அந்த மாணவி முடிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் பல்வேறு குழந்தைகள் நல ஆர்வலர்களும் அந்த பள்ளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.