ஹைதராபாத்தில் 18 பேரை பலி கொண்ட குண்டு வெடிப்பு வழக்கு.. தீவிரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை
டெல்லி: ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள முக்கிய குற்றவாளியான தீவிரவாதி யாசின் பட்கல் மற்றும் கூட்டாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹைதராபாத்தின், தில்சுக்நகர் பகுதியிலுள்ள கோனார்க் மற்றும் வெங்கடாத்திரி தியேட்டர்கள் அருகே 2013, பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 131 பேர் படுகாயமடைந்தனர்.
தேசிய விசாரணை ஏஜென்சி இந்த வழக்கை விசாரித்தது. குற்றப்பத்திரிக்கையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான கர்நாடகாவை சேர்ந்த யாசின் பட்கலுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறப்பட்டது. தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகவும், கூட்டாளிகள் மேலும் நால்வருக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகளின்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம் என்ற கணக்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று என்.ஐ.ஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று யாசின் பட்கல் மற்றும் நால்வருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், நேபாள எல்லையில் வைத்து யாசின் பட்கல் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட, மிகப்பெரிய தீவிரவாதியான யாசின் பட்கல் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.