சத்யம் கம்ப்யூட்டர் மோசடி வழக்கு : ராமலிங்க ராஜூவுக்கு 7 ஆண்டுகள் சிறை - ரூ. 5 கோடி அபராதம்
ஹைதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ உட்பட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராமலிங்க ராஜூவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், அதன் வரவு செலவு கணக்கில் பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அந்நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்க ராஜூ மீது புகார் அளிக்கப் பட்டது.
இது நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி எனக் கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சத்யம் கப்யூட்டர்ஸ், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ கூறியது.
இது தொடர்பாக ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஹைதராபாத் சிபிஐ தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. 226 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். சுமார் 3 ஆயிரம் ஆவணங்கள் சான்று ஆவணங்களாக குறிக்கப்பட்டன.
விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என ஹைதராபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராமலிங்க ராஜூவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.
மற்ற 9 பேருக்குமான தண்டனை விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.