”மட்டன் கறி” சமைக்கத் தெரியாத மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்- தெலுங்கானாவில்!
கடேடன்: ஹைதராபாத்தில் மனைவிக்கு நாக்குக்கு ருசியாக ஆட்டிறைச்சி செய்யத் தெரியவில்லை என்று கூறி மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திய குடிகார கணவன் ஒருவன் மனைவியை கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள கடேடன் பகுதியில் வசித்து வருபவன் சங்கர் ராவ். கடந்த 20 ஆம் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சங்கருக்கு அவனது மனைவி சுலோச்சனா ஆட்டுக்கறியை பரிமாறியுள்ளார்.
உச்சகட்ட போதையில் இருந்த அந்தக் கொடூரனோ, அது சுவையாக இல்லை என்று கூறி மனைவியை பலமாகத் தாக்கியுள்ளான். இதை சுலோச்சனாவின் அம்மாவும், அவரது சொந்த மகளும் தடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் போதை தலைக்கேறிய அந்த கொடுமைக்கார கணவன் மண்ணெண்ணெயை ஊற்றி தன் மனைவியை எரித்துள்ளான். அக்கம் பக்கத்தினரின் உதவியால் சுலோச்சனா உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து சங்கரைக் கைது செய்துள்ள போலீசார் அவனைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.