மாணவியை கோடாரியால் வெட்டி விட்டு விஷம் குடித்து மாணவர் தற்கொலை - போலீஸ் விசாரணை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் முதலாமாண்டு என்ஜினியரிங் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய மாணவர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தென்மேற்கு ஐதராபாத்தில் உள்ளது அரோரா பொறியியல் கல்லூரி. இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான ரவளியை, கோடாரியால் வெட்டினார் வாலிபர் ஒருவர். பின்னர், மற்ற மாணவர்கள் அவரைத் துரத்திப் பிடிப்பதற்குள் அந்த வாலிபரும் விஷமருந்தினார்.
உடனடியாக அம்மாணவி மற்றும் வாலிபரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு வெவ்வேறு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி விஷமருந்திய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியை கோடாரியால் தாக்கிய வாலிபர் மற்றொரு கல்லூரியில் படித்து வந்தவர் எனக் கூறப்படுகிறது.
மாணவி ரவளி இந்தக் கல்லூரியில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் முதலாம் ஆண்டு படிப்புக்கு சேர்ந்தார் என்று பேராசிரியர் ஸ்ரீலதா என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், "கல்லூரியில் இன்று காலை எங்களுடைய மாணவர்கள், பஸ் டிரைவர்கள், பாதுகாவலர்கள் முன்னிலையில் மர்மநபர் ஒருவர் எங்களது முதலாம் ஆண்டு மாணவியை தாக்கிவிட்டார். அப்போது நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். மாணவி பலத்த காயம் அடைந்து இருந்தார். அதற்கிடையே மாணவியை தாக்கிய வாலிபர் விஷத்தை குடித்துவிட்டார். எங்களுடைய ஆசிரியர்கள் அவர் விஷம் குடிப்பதை தடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை."எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.