நடிகர் கலாபவன் மணி உடலில் நஞ்சு கலந்த மது... ஹைதராபாத் ஆய்வில் உறுதி
ஹைதராபாத்: மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த மது கலந்திருந்தது ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கலாபவன் மணி (45). இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அளவுக்கதிகமான மது அருந்தியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது.
பின்னர் கலாபவன் மணியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அதில் பூச்சி கொல்லி , எத்தனால், மெத்தனால் வேதிபொருள் இருந்தது தெரிய வந்தது.
சகோதரர் சந்தேகம்...
இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணனும் புதிய சந்தேகங்களைக் கிளப்பினார். அதாவது, ‘கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் நடிகர்கள் ஜாபர், ஷாபு உள்பட 6 பேர் கலந்துகொண்டு உள்ளனர். அவர்களில் கலாபவன் மணியை தவிர மற்ற யாருடைய உடலிலும் ‘மெத்தனால்' கலக்கவில்லை. ஆனால் கலாபவன்மணியின் உடலில் மட்டும் ‘மெத்தனால்' எப்படி கலந்தது?' என அவர் கேள்வி எழுப்பினார்.
மறு ஆய்வு...
இதனால், கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் ஹைதராபாத் ஆய்வுக் கூடத்திலும் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.
விஷம் உறுதி...
இந்நிலையில், தற்போது அந்த சோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், கலாபவன் மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணை...
இதன்மூலம் மூன்று மாதங்களுக்குப் பிறகு கலாபவன் மணியின் மரணத்தில் இருந்த குழப்பம் நீங்கியுள்ளது. அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தது யார் என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
உதவியாளர்கள்...
முன்னதாக, கலாபவன்மணியின் மரணம் தொடர்பாக அவரது உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரைக் கைது செய்த போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.