ஹெல்மெட் போடாமல் தில்லாக டூவீலர் ஓட்டியவருக்கு ஹைதராபாத் போலீஸ் கொடுத்த ஷாக்!
ஹெல்மெட் போடாமல் டூவீலர் ஓட்டியவருக்கு டுவிட்டரில் ஷாக் கொடுத்த ஹைதராபாத் போலீஸ்.
ஹைதராபாத்: ஹெல்மெட் போடாதது மட்டுமல்லாமல், நான் ஹெல்மெட் போட மாட்டேன். உண்மையான மனிதனாக சாக விரும்புகிறேன் என்ற கெத்தாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சென்றவருக்கு ஹைதராபாத் போலீஸ் ஷாக் கொடுத்துள்ளது. டுவிட்டரில் அவருடைய படத்தைப் போட்டு, ஹைதராபாத் போலீஸ் வெளியிட்டுள்ள செய்தி அடேங்கப்பா ரகம்.
மும்பை மற்றும் ஹைதராபாத் டிராபிக் போலீசார், டுவிட்டர் தளத்தில் மிகவும் பிரபலம். வழக்கமான விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள், படங்களை வெளியிடுவதுடன், பார்ப்பவர்கள் ரசிக்கும்படியான வித்தியாசமான செய்திகள், படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
ஹைதராபாத் டிராபிக் போலீஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டுகிறார். சிக்னலில் காத்திருக்கும் அந்த பைக்கில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், நான் ஹெல்மெட் போட மாட்டேன். உண்மையான மனிதனாக சாக விரும்புகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை வெளியிட்டுள்ள ஹைதராபாத் போலீஸ், கூடவே, அவருக்கு இ-செல்லானையும் இணைந்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல் ஓட்டியதற்கான அபராதத்தை உடனே செலுத்தவும். நாங்கள் உங்களை சாக விட மாட்டோம். ஹெல்மெட் அணியுங்கள். உண்மையான மனிதனாக வாழுங்கள் என்றும் அந்த டுவிட்டர் செய்தியில் ஹைதராபாத் போலீஸ் கூறியுள்ளது.
ஆகா, ஹைதராபாத் போலீசார் அசத்துகிறார்களே என்று நினைத்தால், இன்னும் செய்தி முடியவில்லை. இந்த படத்தைப் பார்த்த சிலர், சில போலீஸ்காரர்கள் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டும் படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். எங்கே இவர்களுக்கு இ-செல்லான் அனுப்புங்கள் பார்க்கலாம் என்று ஹைதராபாத் போலீசுக்கு சவால் விட்டனர்.
புருவ அழகி பிரியா வாரியரின் படத்தை வெளியிட்டு, எங்களுடைய ஆட்களாக இருந்தாலும், அதை பார்த்தும் காணாதது போல் இருக்க மாட்டோம். அவர்களுக்கும் இ-செல்லான் அனுப்பப்படுகிறது என்று ஹைதராபாத் போலீஸ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளது.