ஹைதராபாத் ரயில் பெட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு - பயணிகள் அதிர்ச்சி
ஹைதராபாத்: ரயில் பெட்டியின் கழிவறையில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
விசாகப்பட்டிணம் - ஹைதராபாத் இடையே செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மட்டும் கடந்த 16ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக செகந்திராபாத் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில் பெட்டியைப் பழுது பார்க்க சென்ற இரண்டு ரயில்வே தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த செகந்திராபாத் ரயில்வே போலீசார், ரயில் பெட்டியின் கழிவறையில் மனித எலும்புக் கூடு ஒன்று கிடந்ததைக் கண்டு பிடித்தனர். மீட்கப்பட்ட எலும்புக் கூடு ஒரு ஆணினுடையதாக இருக்க வேண்டும் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள போலீசார், அதனைக் கொண்டு வந்து ரயில் பெட்டியின் கழிவறைக்குள் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் ரயிலில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.