ரூ. 100க்காக ‘டஸ்ட’ரால் அடித்த ஆசிரியர்.. மூளையில் ரத்தம் கட்டி மாணவர் சீரியஸ்
அபராதம் கட்டாத ஆத்திரத்தில் டஸ்டரால் ஆசிரியர் அடித்ததில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூளையில் ரத்தக்கட்டி உருவாகி, அது தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரூ. 100 அபராதம் கட்டாததால், ஆத்திரத்தில் மாணவரை டஸ்டரால் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலிருந்த ராஜ்தானி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் சுரேஷ்குமார். இவர் மூன்று நாட்கள் விடுப்புக் கடிதம் இன்றி விடுமுறை எடுத்ததால், ரூ. 100 அபராதமாகச் செலுத்த வேண்டும் என அவரது வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தக் கட்டணத்தைக் கட்டாமல் மறுநாள் வகுப்புக்கு வந்துள்ளார் சுரேஷ். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், கோபத்தில் கையில் இருந்த டஸ்டரால் மாணவரைத் தாக்கி இருக்கிறார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அம்மாணவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து விட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள் ஆசிரியர் தாக்கியதில் சுரேஷின் மூளை பகுதியில் சிறிய ரத்தக்கட்டி ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனால் அம்மாணவரின் உடல்நிலை மோசமானது. பின்னர் சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் அந்த ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. தற்போது அந்த மாணவர் மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சுரேஷின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது வகுப்பாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.