ஹைதராபாத்தில் விடுதி முன்பு பிணமாகக் கிடந்த விப்ரோ சாப்ட்வேர் என்ஜினியர் ராணி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிய இளம்பெண் விடுதி வாசல் முன்பு பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராணி மனிஷா(23). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அவர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான கச்சிபவுலியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். சிங்கிள் அறையில் தனியாக தங்கியிருந்த அவர் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் புதன்கிழமை காலை விடுதி வாசலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனிஷா காலை 5 மணிக்கு விடுதியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். மனிஷாவின் அறையில் கடிதம் எதுவும் இல்லை.
மனிஷா மன அழுத்தத்தில் இருந்ததால் அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தோம். அவர் ஹைதராபாத் வருவதற்குள் மனிஷா இறந்துவிட்டார் என்று அவரது தோழி தெரிவித்துள்ளார்.