அமெரிக்காவில் நீர் வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்த ஹைதராபாத் டி.சி.எஸ் ஊழியர்
ஹைதராபாத்: டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்த 25 வயது ஊழியர் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நீர் நிலையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நம்பூரி ஸ்ரீதத்தா என்ற அந்த ஊழியர், வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்தவர். டி.சி.எஸ் நிறுவனத்தில் நெட்வொர்க் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அரிசோனா மாகாணத்தில் தங்கியிருந்து, கடந்த 3 வருடங்களாக இவர் பணியாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, சுமார் 3 மணி நேர பயண தூரத்திலுள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்கு தத்தா, சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தா உயிரிழந்தார். டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிக்கு சேரும் முன்பாக, தத்தா, விப்ரோ நிறுவனத்திலும் வேலை பார்த்தவர்.
இதனிடையே, தத்தா உடலை சீக்கிரமாக சொந்த ஊர் கொண்டுவர உதவி செய்யுமாறு அவரது குடும்பத்தார், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.