வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி... விரைவில் வருகிறது ஏ.சி. ஹெல்மட்... இனி ஜிலுஜிலுனு வண்டி ஓட்டலாம்!
ஹைதராபாத்: இருசக்கர வாகனம் ஓட்டிகள் கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்கும் ஏ.சி. ஹெல்மெட்டை உருவாக்கி வருகின்றனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரிகள்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காக்கும் வகையில் கட்டாய ஹெல்மெட் அணியும் உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால், பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய மறுப்பதற்கு முக்கிய காரணம், அதனால் தலை முடிப் பகுதியில் வேர்த்து, வேர்க்கால்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் தான். இதனால் முடி உதிர்வும் ஏற்படுவதாக அவர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குளு குளு ஏ.சி. ஹெல்மெட்டை தயாரித்து வருகின்றனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்.
22 வயது இளைஞர்களான காஸ்தப் கவுந்தியா, ஸ்ரீநாத் கோமுல்லா, ஆனந்த் குமார் ஆகிய மூவரும், மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரிகள். பசுபலியில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி பொறியியல் கல்லூரியில் கடந்த 2016ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர்கள் மூவரும், ஏற்கனவே, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஏ.சி. ஹெல்மட்டை உருவாக்கியவர்கள்.
தற்போது ஜார்ஷ் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஏ.சி. ஹெல்மட்டை உருவாக்கி வருகிறார்கள்.
பேட்டரி பேக் அப்:
இரண்டு மணி நேரம் பேட்டரி பேக் அப் கொண்ட தொழிற்சாலை ஏ.சி. ஹெல்மட்டின் விலை ரூ.5000. எட்டு மணி நேரம் பேட்டரி பேக் அப் கொண்ட தொழிற்சாலை ஏ.சி. ஹெல்மட் ரூ.5500க்கு விற்கப்படுகிறது.
ஜார்ஷ் நிறுவனத்தின் ஒப்பந்தம்:
தெலுங்கானா அரசின் ஆதரவுடன் இயங்கும் ஜார்ஷ் நிறுவனத்திடம் இருந்து ஏ.சி. ஹெல்மட்டை வாங்க இந்திய கடற்படையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன.
ஹெல்மெட் பரிசு:
2018 பயோஏசியா மாநாட்டில் கலந்துகொண்டபோது தெலுங்கானா மாநில தகவல் தொழிட்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவுக்கு ஒரு ஏ.சி. ஹெல்மட் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சந்தையில்:
வரும் ஏப்ரல் மாதத்தில் 20 ஏ.சி. ஹெல்மெட்களை ஹைதராபாத் டிராபிக் போலீசுக்குக் கொடுக்கப்போவதாக கூறும் இந்த இளைஞர்கள், விரைவில் இதனை சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்