ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்த கன்யா குமாரை கேட்டோடு திருப்பி அனுப்பிய போலீஸ்
ஹைதராபாத்: தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அவருக்கு வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மெமுலாவின் மரணத்தை அடுத்து 2 மாதம் விடுப்பில் சென்ற பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பா ராவ் திங்கட்கிழமை பணிக்கு திரும்பினார்.
அவரது வருகையை கண்டித்து மாணவர்கள் அவரின் அலுவலகம் மற்றும் வீட்டை தாக்கினர். போலீசார் வந்து மாணவர்களை கலைந்து போகுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டினர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்திக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் ஹைதராபாத் வந்தார். ஆனால் அவர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய நிர்வாகமும், போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர்.
இது குறித்து கன்யா குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் குரலை அடக்கி வைக்க முடியாது. பல்கலைக்கழகத்திற்குள் ஒரு மாணவரை நுழையவிடாமல் தடுப்பது வேதனை அளிக்கிறது.
மாணவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது. தடியடி நடித்தி மாணவர்களை ஒடுக்க முடியாது. இந்த போராட்டம் தொடரும். நாட்டை, அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை காக்கவே இந்த போராட்டம். ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் கனவு நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.