நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் 6 மாதங்களில் தொடங்கப்படும்.. ஜெம் நிறுவனம்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை 6 மாதங்களில் தொடங்கப்படும் என ஜெம் நிறுவனம் கூறியுள்ளது.
டெல்லி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று ஜெம் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9ம் தேதி தற்காலிகமாக அவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரத்தில் வடகாட்டில் 10ம் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியை அடுத்து நேற்று முன்தினம் போராட்டம் கைவிடப்பட்டது. நல்லாண்டார்கொல்லை என்ற பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் நெடுவாசல், காரைக்கால் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஒப்பந்தத்தில் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம். இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிபிரசாத் நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி பேட்டி அளித்தார். அப்போது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை துவங்க குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆகும். அனைத்து நிர்வாக நடைமுறைகளும் முடிந்த பிறகு அந்த பகுதி மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காது. ஏனேனில் 300 முதல் 400 அடிக்கு கீழேதான் நீர் ஆதாரம் உள்ளது. அதனால் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.