நான் கறி சாப்பிடுவேனே.. வெங்கையா நாயுடு!
உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி: உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் நானும் ஒரு அசைவ பிரியர் தான் என்றும் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து களைக்கட்டியது.
வெங்கய்யா பதிலடி
நாட்டு மக்கள் அனைவரையும் மத்திய அரசு சைவமாக்க பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அடிப்படை ஆதாரமற்றவை
பா.ஜ.க மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார். உணவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன என்றும் வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டினார்.
நானும் நான் வெஜ்தான்
என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இன்று வரை தனக்கு அசைவ உணவுப் பழக்கமே உள்ளது என்று கூறிய அவர் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது என்றார்.
என்னை எப்படி?
மேலும், பா.ஜ.க அனைவரையும் சைவமாக மாற்றப் பார்க்கிறது என்றால், அசைவம் சாப்பிடும் என்னை மாநில பா.ஜ.க தலைவராக எப்படி வைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பினார்.