சொந்த காரணங்களுக்காகதான் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி வந்தேன்.. ஓபிஎஸ் தடாலடி பேட்டி
Recommended Video
டெல்லி: டெல்லிக்கு தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் நேற்று சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுகிறார்.
அரசு முறை பயணமாக பன்னீர் செல்வம் டெல்லி செல்லவில்லை என்பதால் இந்த பயணம் குறித்து பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் எழுந்தன.
இதையடுத்து இன்று மதியம் 2 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார், பன்னீர் செல்வம். அப்போது அவர் கூறியதாவது: நான் அரசியல் பயணமாகவோ, அல்லது அரசு முறை பயணமாகவோ டெல்லி வரவில்லை. மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை பார்க்க வந்தேன்.
மிகப்பெரிய உதவியாக, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை, எனது சகோதரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்ல தந்து உதவினார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு அதற்காக நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும்போது தமிழக மக்களுக்கு எது நல்லது என்பது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் கலந்து பேசி முடிவு செய்யும் என்றார்.
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், அதிமுக வேட்பாளரை நிறுத்தி பாஜகவிடம் ஆதரவு வழங்க கோருவீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து முறைப்படியான அறிவிப்பு வெளியாகட்டும். பிறகு தலைமை கழகத்தில் பேசி முடிவெடுப்போம்.
இப்போது எனது சொந்த பயணமாக, நன்றி தெரிவிக்க மரியாதை நிமித்தமாக மட்டுமே டெல்லி வந்து நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளேன் என்றார்.
பலமுறை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோதும், பத்திரிகைகளில் வந்த யூக செய்திகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என தடாலடியாக கூறிய ஓபிஎஸ், எனது வருகையில் அரசியல் இல்லை என்றும் திரும்ப திரும்ப கூறினார்.