நான் உங்களின் நம்பர் ஒன் சேவகன்: வெற்றி பெற்ற பிறகு மோடி பேச்சு
வதோதரா: நான் உங்களின் நம்பர் ஒன் சேவகன் என்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நரேந்திர மோடி வதோதராவில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மோடி வரும் 21ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மோடி முதன்முறையாக குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
வதோதரா
காலையில் இருந்து நான் ஏதாவது பேச மாட்டேனா என டிவிக்காரர்கள் காத்திருந்தார்கள். ஆனால் நான் வெற்றி பெற்ற பிறகு முதன்முதலில் வதோதராவில் தான் பேச வேண்டும் என்று வந்தேன்.
நல்லநேரம்
நாட்டுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு வதோதராவில் 50 நிமிடங்கள் செலவழித்தேன். நீங்கள் எனக்கு 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் அளித்திருக்கிறீர்கள்.
சாதனை
ஒவ்வொரு வாக்காளரும் மோடியாக மாறி எனக்கு வாக்களித்துள்ளனர். வதோதராவில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளேன். இந்த புதிய சாதனையை படைக்க எனக்கு வாக்களித்த வதோதராவுக்கு நன்றி.
கைவிட மாட்டேன்
நான் எங்கு இருந்தாலும் மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொள்வேன். என் வெற்றி மக்களையே சேரும். என்னை ஆதரித்தவர்களை கைவிட மாட்டேன். பாஜகவுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது என்று அறிந்தேன். இதுவே இந்தியாவில் புதிய முன்உதாரணமாகும்.
குஜராத்
குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் மீடியா பாஜகவை விமர்சித்திருக்கும். 26க்கு 26 தொகுதிகளை பெறுவது சாதராணம் அல்ல. இதை சாத்தியமாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி.
சுதந்திரம்
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் தான் அதிக முறை ஆட்சி அமைத்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவர்கள் நிர்ணயித்த தேர்தல் இது. சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ளது.
முதல் ஆள்
சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் ஆளும் அரசு தற்போது முதல்முறையாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த முதல் பிரதமர் நான் தான்.
நாடு
நாட்டின் விடுதலைக்காக போராட, சிறைக்கு செல்ல, உயிரை கொடுக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இது நாட்டுக்காக சாகும் நேரம் அல்ல, வாழும் நேரம்.
நன்றி
நாட்டின் 1.25 கோடி மக்களின் கனவுகளை நனவாக்க அரும்பாடுபட வேண்டிய நேரம் இது. பாஜகவுக்கு 330 சீட்கள் கொடுத்த உங்களுக்கு நன்றி. அரசு தனிப்பட்ட பகுதிக்கோ, கட்சிக்கோ அல்ல மக்களுக்கு சொந்தமானது.
சேவகன்
நான் உங்களின் நம்பர் ஒன் சேவகன். என் கடமையை செய்ய உங்களின் ஆசி தேவை. நாட்டு மக்களுக்காக என் உடலின் ஒவ்வொரு அணுவும் பாடுபடும்.
ஒத்துழைப்பு
நான் வதோதராவுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே சொந்தமானவன். நாட்டை வழிநடத்த அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறேன். தேர்தலுக்காக பாடுபட்ட கட்சியினர் மற்றும் மக்களுக்கு நன்றி என்றார் மோடி.