நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன்.. வாய்திறந்த எஸ்.வி.சேகர்
எஸ்வி சேகர் கைதுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் தலைமறைவாக இல்லை என எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: எஸ்வி சேகர் கைதுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் தலைமறைவாக இல்லை என எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி பதிவிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளித்ததோடு, அவர் வீட்டின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டங்கள் தோறும் எஸ்வி சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எஸ்வி சேகரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
கமிஷனர் உத்தரவு
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.
4 பிரிவுகளில் வழக்கு
அதன்பேரில் ‘சைபர் கிரைம்' போலீசார் எஸ்.வி.சேகர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்கு தூண்டுவது, தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்புதல், பெண்களை இழிவுப்படுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எஸ்வி சேகர் தலைமறைவு
இதையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கைதுக்கு பயந்து எஸ்வி சேகர் தலைமறைவாகிவிட்டார் என தகவல் வெளியானது.
3 நாட்களில் திரும்பிவிடுவேன்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எஸ்வி சேகர் தான் தலைமறைவாக இல்லை என தெரிவித்துள்ளார். சொந்தவேலை காரணமாக பெங்களூரு வந்திருப்பதாகவும் இன்னும் 3 நாட்களில் சென்னை திரும்பிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.