மோடி மாதிரி பயந்தாங்கொள்ளி கிடையாது.. எப்படி ஒப்புக் கொண்டேன் பார்த்தீங்களா...மார்தட்டும் 'திக்'!
டெல்லி: "நானெல்லாம் மோடியை மாதிரி பயந்த ஆசாமி கிடையாது, அம்ரித்தா ராயுடன் எனக்கிருந்த தொடர்பை எப்படி போட்டு உடைத்தேன் பார்த்தீர்களா" என்று மார்தட்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் தனக்கு திருமணமாகியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அவர் முன்பு,போட்டியிட்ட தேர்தல்களில் இந்த தகவலை அளிக்காமல் இருந்தார்.
இதை எதிர்த்து விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் திக்விஜய்சிங். இந்நிலையில் டிவி தொகுப்பாளர் அம்ரிதா ராயுடன் தனக்கு உறவு இருப்பதை ஒப்புக்கொண்ட திக்விஜய்சிங் அவரையே திருமணம் செய்யப்போவதாக நேற்று திடீரென அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.
தன்னைவிட பாதி வயது குறைந்த திருமணமான ஒரு பெண்ணை திக்விஜய்சிங் திருமணம் செய்யப்போவதாக அறிவித்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இன்று அவர் இதுகுறித்து கூறியதாவது:
"நான் எனது உறவை மோடியைப்போல மறைத்துக்கொள்ளவில்லை. அவரைப்போல நான் கோழை கிடையாது. அம்ரிதா ராய் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு முடிந்ததும் அம்ரித்தா ராயை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜகவின் செய்தித்தொடர்பாளரான மீனாட்சி லேகி நிருபர்களிடம் பேசுகையில்,
"ஒரு புதிய தார்மீகதன்மை பற்றி திக்விஜய்சிங் விளக்குகிறார். அடுத்தவர்களுக்கு தார்மீக கடமைகள் குறித்து போதித்தவர்கள் முதலில் தங்களது வாழ்க்கையில் அதை பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.