என் வேலை நடிப்பு.. நான் வேட்பாளர் இல்லை.. அஜீத் ஸ்டைலில் கரீனா கபூர் அதிரடி!
போபால்: நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.
பாஜகவின் கோட்டையாகத் திகழும் போபாலில், காங்கிரஸ் 1984-ல் இருந்து 25 வருடங்களாக வெற்றி பெறவில்லை. இந்தநிலையில், போபாலை கைப்பற்ற அந்த தொகுதியில் நடிகை கரீனா கபூரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியூகம்
போபாலில் நீண்ட நாட்களாக பாஜக வேட்பாளரே வெற்றி பெற்று வருகின்றனர். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விட்டது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது போபாலை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
எதிர்பார்ப்பு
இந்நிலையில், சினிமா நட்சத்திரங்களில் யார் யாரெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உள்ளனர், தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பட்டோடி குடும்பத்தை சேர்ந்த யாரும் போபால் தொகுதியில் போட்டியிடவில்லை. தற்போது மாநிலத்தில் பல்வேறு அரசியல் சூழல்கள் மாறியுள்ளதால் கரீனாவை நிற்க வைத்தால் நிச்சயம் போபால் காங்கிரஸுக்கு கைமாறிவிடும் என்பது அக்கட்சியின் கணக்கு.
காங்கிரஸ் நிர்வாகி பேச்சு
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அனீஸ் கான் பேசுகையில், போபால் தொகுதியில் பலமாக காலூன்றியுள்ள பா.ஜனதாவை தோற்கடிக்க கரீனா கபூரை களமிறக்க வேண்டும் என்றும் கரீனா கபூருக்கு இளம் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் கரீனாவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்றார்.
கரீனா கபூர் மறுப்பு
இந்நிலையில் தேர்தலில் போட்டி என வந்த தகவலை மறுத்துள்ள கரீனா கபூர், நான் அரசியலில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வில்லை என்றும் கூறினார். இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய முழு கவனமும் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.