தலித் வீடுகளில் உணவு உட்கொள்ள நான் ஒன்றும் கடவுள் ராமர் இல்லை.. உமா பாரதியின் பேச்சால் சர்ச்சை!
தலித் வீடுகளில் உணவு உட்கொள்ள தான் ஒன்றும் கடவுள் ராமர் இல்லை என மத்திய அமைச்சர் உமா பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சட்டார்பூர்: தலித் வீடுகளில் உணவு உட்கொள்ள தான் ஒன்றும் கடவுள் ராமர் இல்லை என மத்திய அமைச்சர் உமா பாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் தாத்ரி என்ற கிராமத்தில் தலித் மக்களுடன் உணவருந்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உமா பாரதி கலந்து கொண்டார்.
அப்போது தலித் மக்கள் தயாரித்த உணவை உட்கொள்ளுமாறு கூறியுள்ளனர். உடனடியாக அந்த உணவை உட்கொள்ள அமைச்சர் உமாபாரதி மறுத்துவிட்டார்.
அமைச்சர் விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் உமாபாரதி விளக்கம் அளித்துள்ளார்.
நான் ஒன்றும் ராமர் இல்லை
அதாவது தலித் மக்களுடன் சேர்ந்து உணவு உட்கொள்ள அவர்களை புனிதப்படுத்த நான் ஒன்றும் கடவுள் ராமர் கிடையாது என அவர் கூறியுள்ளார். தலித் மக்களுடன் நானும் உணவு உட்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியாது என்றும் உமாபாரதி கூறியுள்ளார்.
எங்கள் வீட்டிற்கு அழைக்கிறேன்
தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று நான் உணவு உட்கொண்ட பழக்கம் இல்லை என்றும் இருந்தாலும் இந்த பழக்கத்தை ஆதரிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தலித் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்றாலும் அவர்களை எனது வீட்டிற்கு அழைக்கிறேன்.
தட்டுகளை சுத்தம் செய்வார்
டெல்லிக்கு வாருங்கள். என்னுடைய மருமகன் உங்களுக்காக உணவு சமைப்பார். நான் உங்களுக்கு பரிமாறுகிறேன். சாப்பிட்ட பின்னர் நீங்கள் சாப்பிட்ட தட்டுகளை மருமகன் எடுத்து சுத்தம் செய்வார் என கூறினார்.
மக்கள் அதிர்ச்சி
சமீபகாலமாக தலித் வீடுகளுக்கு செல்லும் பாஜக அமைச்சர்கள் அவர்களுடன் உணவு உட்கொள்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் உமாபாரதி உணவு உட்கொள்ள மறுத்ததோடு சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியுள்ளார்.
பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.