தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: மகளிர் தினத்தில் ‘உபேர்’ பலாத்கார பெண்ணின் கண்ணீர்
நியூயார்க்: மனஉளைச்சல் காரணமாக தினம் தினம் நரகவேதனையை அனுபவிக்கிறேன் என்று உபேர் கால் டாக்சி டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கூறியுள்ளார். உபேர் நிறுவனம் தனது வேதனையை புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், உபேர் கால் டாக்சி டிரைவரால் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தன்னைக் பலாத்காரம் செய்தவனைப் பார்த்ததும் இந்த பேய்தான் என்னை சீரழித்தது என்று அலறினார்.
அந்த சம்பவத்தின் பாதிப்பு தினம் தினம் தன்னை வேதனைக்குள்ளாக்கிவருகிறது என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது வழக்கறிஞர் டக்ளஸ் விக்டோர் மூலமாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம்
பெண்கள் சம உரிமை பெறுவதற்காக எத்தகைய சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், நியாயமான பாதுகாப்பு வழங்கபடாத வரையிலும், பெண்களால் உண்மையான சம உரிமையை பெற முடியாது.
மனதளவில் பாதிப்பு
பலாத்கார சம்பவத்தால் நான் இன்னமும் தினம் தினம் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகிறேன். வெறும் வார்த்தைகளால் அதை விவரித்து விட முடியாது.
மனக்காயம்
இதனை, உபேர் நிறுவனம் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. பாதுகாப்பு விஷயத்தில் ஒப்புக்கு சில மாற்றங்களை செய்து விட்டு டெல்லியில் மீண்டும் தனது சேவையை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இது எனது மன காயத்தை அவமதிப்பது போன்றதாகும்.
மறக்க நினைத்தாலும்
பெண் தன்னை பாதுகாப்பாக உணராத வரை, நாம் நிச்சயம் சமத்துவத்தைப் பெற முடியாது. எனக்கு நடந்த கொடூரத்தை நான் மறக்க நினைத்தாலும் பல முறை குறுக்கு விசாரணையின்போது சொல்ல நேர்கிறது.
நரக வேதனை
நான் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தினம் தினம் மன உளைச்சளால் நரக வேதனையை அனுபவிக்கிறேன்" என்றார்.
மனநலம் சார்ந்த
பலாத்காரம் என்பது ஒரு பெண்ணின் உடல் சார்ந்து நிகழ்த்தப்படும் வன்முறை மட்டுமல்ல. அது அவளது மன நலத்தை பாதித்து, நடைபிணமாக மாற்றும் ஆகப் பெரிய வன்முறை என்பதே இவரது பேச்சில் நிரூபணமாகிறது.