"ராமரின் வம்சாவளி நான்.. ஆதாரம் என்கிட்டே இருக்கு.." பாஜக பெண் எம்பி அதிரடி அறிவிப்பு!
ராமரின் வம்சாவளி நான் என்று பாஜக பெண் எம்பி அறிவித்துள்ளார்
Recommended Video
ஜெய்ப்பூர்: "நான் ராமரின் வம்சாவளி.. எங்கள் குடும்பம் ராமரின் வம்சாவளியினர்தான்" என்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், பாஜக பெண் எம்பியுமான தியா குமாரி அறிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது, "கடவுள் ராமரின் வம்சமான ரகுவம்சத்தை சேர்ந்தவர்கள் இன்னமும் அயோத்தியில் வசிக்கிறார்களா" என்று நீதிபதிகள் கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு மூத்த வக்கீல் கே.பராசரன், "இதை பற்றின தகவல் என்னிடம் இல்லை. ஆனால் அதை பற்றியறிய முயற்சி செய்வேன்" என்று சொன்னார்.
இந்த நிலையில், பாஜக எம்பி தியா குமாரி இதை பற்றி ஒரு கருத்து கூறியுள்ளார். இவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரச வம்சத்தை சேர்ந்தவர். மேலும் ராஜ்சமந்த்த தொகுதியின் பாஜக எம்பியும்கூட. இவர் தங்களது குடும்பம் ராமர் வம்சத்தை சேர்ந்தது என்று அறிவித்துள்ளார்.
இதை பற்றி அவர் சொல்லும்போது, "ராமரின் வம்சாவளியினர் இன்னும் இருக்கிறார்களா? என்று கோர்ட்டு கேட்டிருக்கிறது. ராமரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் உலகம் முழுக்க பரந்து இருக்கிறார்கள். என் குடும்பம், ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது.
இதற்கான கையெழுத்து பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் இருக்கின்றன. தேவைப்பட்டால், அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் கொடுத்து இதை நிரூபிப்பேன். ஆனால், கோர்ட்டின் விசாரணையில் நான் தலையிடமாட்டேன். இந்த வழக்கு விசாரணையை சீக்கிரமாக நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்றார்.