சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மமதாவின் 6-வது பேரணி- பாஜகவை தனிமைப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள அழைப்பு!
கொல்கத்தா: பாஜகவை தனிமைப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக புருலியாவில் இன்று 6-வது பேரணியை நடத்தினார் மமதா பானர்ஜி. இந்த பேரணியில் மமதா பானர்ஜி பேசியதாவது:
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தினால் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். இந்த சட்ட திருத்தத்துக்கு எதிரான எனது போராட்டத்தை நான் திரும்பப் பெற மாட்டேன்.
தேசத்தின் விடுதலைக்கு எதிரானதாக குடியுரிமை சட்ட திருத்தம் அமைந்திருக்கிறது. பாஜகவை தனிமைப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது.
சட்டப்பூர்வமாக இந்த நாட்டில் வாழும் குடிமக்களின் குடியுரிமையை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. அது நடக்காது. உங்களது பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த நாட்டைவிட்டு யாரையும் வெளியேற்றிவிட முடியாது.
மேற்கு வங்க்கத்தில் என்.பி.ஆரை நாங்கள் அனுமதிக்கவே முடியாது. ஏற்கனவே எங்கள் அரசால் என்.பி.ஆர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.