சுனந்தா சாவு பற்றி பொய்யான பிரேத பரிசோதனை அறிக்கையளிக்க மிரட்டல்- டாக்டர் பரபரப்பு புகார்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவு இயற்கையாக நடந்ததாக அறிக்கை தயாரிக்கும்படி பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் குழு தலைவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிதரூர் மீதான பிடி இறுகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சசிதரூரின் ஆசை மனைவி
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சுனந்தா புஷ்கரை தனது 3வது மனைவியாக்கிக் கொண்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொச்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் சுனந்தா புஷ்கர் இருந்தார்.
பாகிஸ்தான் பெண்ணால் புயல்
சிறப்பாக போய் கொண்டிருந்த இவர்கள் காதல் வாழ்க்கையில், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவரால் புயல் வீச தொடங்கியது. டிவிட்டரில் சசி தரூரும், மெஹரும் காதல் ரசம் பொழிந்ததாக குற்றம்சாட்டி சுனந்தா புஷ்கர் டிவிட் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் சுனந்தாவுக்கும், சசிதரூருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
சுனந்தா புஷ்கர் மர்ம சாவு
இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரிந்த சில தினங்களிலேயே ஒரு விபரீதம் நிகழ்ந்தது. டெல்லியின் லீலா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் ஜனவரி 17ம்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
எனக்கு தெரியாதே..
காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பியபோதுதான், இதுகுறித்து தனக்கு தெரியவந்ததாக கூறி சசிதரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்ட்டிடியூட் (எய்ம்ஸ்) மருத்துவர் குழுவை வைத்து சுனந்தா புஷ்கருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
விஷத்தால் சாவு
சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்தாரா, கொல்லப்பட்டாரா என்பதை தெளிவுபடுத்தாமல், விஷம் மூலமாக சுனந்தா இறந்துள்ளார் என்ற வகையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. மேலும், இதை ஆதாரமாக கொண்டே காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
டாக்டர் பரபரப்பு கடிதம்
இந்நிலையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இப்போது, திடீரென பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குழுவின் தலைவர் சுதிர் குப்தா, தற்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
போலி அறிக்கை தயாரிக்க மிரட்டல்
அந்த கடிதத்தில், "சுனந்தா புஷ்கர் மரணத்தை இயற்கையானது என்றுகூறி அறிக்கையளிக்குமாறு உயர் அதிகாரிகளால் நான் மிரட்டப்பட்டேன். இருப்பினும் நான் மிரட்டலுக்கு அஞ்சாமல், விஷம் மூலமாக சுனந்தா இறந்துள்ளார். அவராக விஷ மருந்து எடுத்துக்கொண்டும் இறந்திருக்கலாம், அல்லது, விஷம் அளித்து கொலையும் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் அறிக்கையளித்தேன்" என்று சுதிர் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி அளிக்கிறார்கள்..
சுதிர் குப்தா எழுதிய கடிதத்தில் மேலும் கூறுகையில், "நான் இவ்வாறு அறிக்கையளித்ததன் காரணமாக தொடர்ந்து பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறேன். இப்பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்" என்று தனது கடிதத்தில் கூறியுள்ளாராம்.
பதவியை பறிக்க சதி!
இதுகுறித்து எய்ம்ஸ் வட்டாரங்களில் கேட்டபோது, சுதிர்குப்தாவை தடயவியல் தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. இதனால் சுதிர்குப்தா, அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கலாம் என்று கூறினர்.
டாக்டர் ஒப்புதல்
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சுதிர் குப்தாவை தொடர்புகொண்டு கேட்டபோது, அமைச்சருக்கு கடிதம் எழுதி தனது குறைகளை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டபோதிலும், கடிதத்தில் எழுதிய அம்சங்கள் குறித்து வெளிப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதாக பாஜகவின் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.