நைட் 10 மணிக்கு மேல் கட்டாயம் பட்டாசு வெடிப்பேன்.. பரபரப்பை கிளப்பும் பாஜக எம்.பி
பழக்கவழக்கங்களில் நீதிமன்றம் தலையிடகூடாது என பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
போபால்: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், இரவு 10 மணிக்கு மேல் கண்டிப்பாக பட்டாசு வெடிப்பேன் என மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.பி., சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார். இப்படி ஒரு கட்டுப்பாடு மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கூட இருந்ததில்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை அளித்தது. இந்த தீர்ப்புக்கு பாஜக தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தீபாவளிக்கு புது டிரஸ்
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதுகுறித்து சொல்லும்போது, இந்த தீர்ப்பினை கோர்ட் மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்து விடுமோ" என்ற பயம் ஏற்படுவதாக கூறினார்.
பேஸ்புக்கில் பதிவு
அதேபோல, கோர்ட் தீர்ப்புக்கு ம.பி., மாநிலம், உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்பி.,யான சிந்தாமணி மாளவியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சிறைக்கு கூட போவேன்
"நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். எப்பவும் இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகுதான் பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ளவே மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறைக்கே போவதானாலும் அதற்காக மகிழ்ச்சியடைவேன்.
கோர்ட் சொல்ல கூடாது
இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து காலண்டர்கள் உள்ளன. விழாக்களை நடத்த கால நேரத்தை நிர்ணயம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை. நீதிமன்ற உத்தரவைவிட வழக்கத்தை பின்பற்றுவதையே நான் விரும்புகிறேன்" சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார்.