சல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்
மும்பை: சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசிடம் பெர்மிட் வாங்கி அங்கு அவரது படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம். இது அவருக்கு நாங்கள் விடும் சவால் ஆகும் என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலை அடுத்து மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்த பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேறமாறு கூறி 48 மணிநேரம் கெடுவும் விதித்தது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா. இதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில்,
பாகிஸ்தான் நடிகர்கள்
பாகிஸ்தான் நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்கும் வரை அவர்கள் திருந்த மாட்டார்கள். பாகிஸ்தான் நடிகர்களின் படங்களை திரையிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
சல்மான் கான்
சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசிடம் பெர்மிட் வாங்கி அங்கு அவரது படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம். இது அவருக்கு நாங்கள் விடும் சவால் ஆகும்.
வீரர்கள்
அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு சல்மான் கானோ, பாலிவுட்டோ இரங்கல் தெரிவித்தார்களா? சல்மானை பொருத்த வரை பாகிஸ்தான் அவருக்கு படம் போனியாகும் இடம். அதனால் தான் அவர் இப்படி பேசுகிறார்.
பஜ்ரங்கி பாய்ஜான்
பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் சல்மான் எல்லையை தாண்டி சென்று சிறுமியை பாகிஸ்தானில் விடுவார். உண்மையில் அந்த காட்சியை இந்தியாவில் படமாக்கினார்கள். ஏனென்றால் பாகிஸ்தான் தனக்கு வேலை பெர்மிட் தராது என்பது சல்மானுக்கே தெரியும். பாகிஸ்தான் கலைஞர்களை ஆதரிக்கும் சல்மான் கானுக்கு பாடம் கற்பிக்க அவரது படங்களை புறக்கணிக்கும் நேரம் வந்துவிட்டது.
ரஜினிகாந்த்
கலைஞர்களை பொருத்த வரை எல்லை இல்லை என்கிறார் சல்மான். காவிரி விவகாரம் கொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நடப்பது எதுவும் தெரியாதா. கர்நாடகாவுக்கு எதிராக ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் போராடவில்லையா? அவர்களுக்கு எல்லை இல்லையா?