பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டும் குண்டு துளைக்காத மேடை இல்லை!
டெல்லி: நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த ஆண்டும் குண்டு துளைக்காத மேடையைத் தவிர்த்துவிட்டு திறந்த வெளியிலேயே பேசினார் மோடி.
இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம்.
அந்த வழக்கப்படி, இன்று டெல்லி செங்கோட்டையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, பின்னர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
பின்னர் செங்கோட்டையின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்ட மேடையில் நின்றபடி உரை நிகழ்த்தினார். வழக்கமாக இங்கு குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டே இந்த வழக்கத்தை கைவிட வைத்தார் மோடி. இந்த முறை தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தும், அப்படி எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. திறந்த வெளி மேடையில் நின்றபடி பேசினார் மோடி.