நான் ஏன் தெரியுமா உலக தலைவர்களை கட்டிப்பிடிக்கிறேன்? விமர்சனங்களுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த மோடி!
தன்னை சந்திக்கும் உலக தலைவர்களை கட்டிப்பிடிப்பது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: தன்னை சந்திக்கும் உலக தலைவர்களை கட்டிப்பிடிப்பது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்திக்கும் போது கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவுக்கு வரும் தலைவர்களையும் கட்டியணைத்து பிரமதர் மோடி வரவேற்று வருகிறார்.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில், மோடியின் கட்டிப்புடி ராஜதந்திரம் பலிக்கவில்லை என்று விமர்சித்து இருந்தார்.
பிரதமர் மோடி விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்திலும் மோடி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து விமர்சித்து ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
கட்டிப்பிடிப்பது குறித்து கேள்வி
ஜி நியூஸ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது உலக தலைவர்களை அவர் கட்டிப்பிடிப்பது குறித்தும் அதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
நான் சாதாரண மனிதன்
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, நான் ஒரு சாதாரண மனிதன், எனக்கு அனைத்து நெறிமுறைகளும் மரபுகளும் தெரியாது என்றார். இந்த சாதாரண மனிதனின் திறந்த மனப்பான்மை உலகத்தால் விரும்பப்படுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தானும் பயிற்சி பெற்றிருந்தால்..
நட்பு உறவுகள் கைக்குள் வந்துவிடுவதாகவும் அவர் கூறினார். மற்ற தலைவர்களை போல் தானும் பயிற்சி பெற்றிருந்தால் கைகொடுப்பது, வலது மற்றும் இடது பக்கம் பார்ப்பது போன்ற மரபுகளை பின்பற்றியிருப்பேன் என்றார்.
எதுவும் தெரியாது எதுவும் புரியாது
ஆனால் தான் ஒரு சாதாரண மனிதன், என் நாட்டிற்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதையே தான் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். தான் பிரதமரானபோது மோடிக்கு குஜராத்துக்கு வெளியே எதுவும் தெரியாது எதுவும் புரியாது என்ற விமர்சனம் இருந்தது என்றும் அவர் கூறினார்.
அனுபவம் இல்லை
தான் எப்படி வெளியுறவு கொள்கையை கையாளப் போகிறேன் என்று பலரும் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் பிரதமர் மோடி அந்த பேட்டியில் தெரிவித்தார். தனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லாததால் அந்த விமர்சனங்கள் சரியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
பயன்படுத்திக் கொண்டேன்
தனக்கு எந்த அனுபவமும் இல்லாமல் இருந்ததை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். தனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லாமல் இருந்தது என்றும் அவர் கூறினார்.
மக்களின் பிரதிநிதி
உலகத் தலைவர்கள் அருகில் நிற்கும் போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, உலகத் தலைவர்கள் அருகில் நிற்கும்போது தான் நரேந்திர மோடி அல்ல 1.25 பில்லியன் மக்களின் பிரதிநிதி என்ற எண்ணம் மட்டுமே இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.