கருத்துக்கணிப்பு எல்லாம் வேஸ்ட்.. களத்தில் இறங்கி வேலை பார்ப்பதுதான் பெஸ்ட்: சித்தராமையா
தான் கருத்துக்கணிப்புகளை எல்லாம் ஒரு போதும் நம்புவதில்லை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரு: தான் கருத்துக்கணிப்புகளை ஒருபோதும் நம்புவதில்லை என்றும் களத்தில் இறங்கி மக்களுடன் வேலை பார்ப்பதை மட்டுமே நம்புவதாகவும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
வருகிற மே 12ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஆளுங்கட்சியான காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மைசூர் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி நிச்சயம் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார்.
மேலும், வரப்போகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்களுக்கு குறைவாகத்தான் ஜெயிக்கும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தான் எப்போதும் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. அவை எந்த விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தாது.
மக்களோடு மக்களாக இறங்கி களத்தில் வேலை செய்வதுதான் எப்போதும் கைகொடுக்கும்; அதை மட்டுமே தான் நம்புவதாகவும், இந்தத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.