மாட்டிறைச்சி விவகாரம்- மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்! நக்விக்கு எதிராக ரிஜிஜூ போர்க்கொடி!!
டெல்லி: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அமைச்சர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிட விரும்புவோர் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் நக்வியின் கருத்துக்கு மற்றொரு மத்திய அமைச்சர் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நக்வி அண்மையில், மாட்டிறைச்சி சாப்பிடாமல் வாழ முடியாது என்கிறவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனக் கூறி இருந்தார். இதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தற்போது நக்வியின் கருத்துக்கு மத்திய அமைச்சர்களில் ஒருவரான கிரண் ரிஜிஜூவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிஜிஜூ கூறியதவது:
நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். எனது சொந்த மாநிலம் அருணாசலபிரதேசம். என்னை யாராவது தடுக்க முடியுமா?
நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் பசுவதை தடை சட்டத்தை இயற்ற முடியாது. வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்.
‘
யாரும் மாட்டுக்கறி சாப்பிடுவதை தடுக்க முடியாது. மக்களின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகள் நாடுமுழுவதும் சமமாக மதிக்கபட வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அங்கு இந்து மதம் நம்பிக்கை உகந்த சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் இயற்றலாம்.
ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி அதிகமாக சாப்பிட கூடிய மக்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வாழ்க்கை நெறிமுறையில் பிரச்சினை ஏற்படுத்த கூடாது.
மத்திய அமைச்சர் நக்வியின் கருத்து சரியானது அல்லதுதான்.. ஆனால் கருத்துரிமை என்கிற அடிப்படையில்தான் அவர் பேசி உள்ளார்.
இவ்வாறு ரிஜிஜூ கூறினார்.