சரியாக தேர்தல் நேரத்தில் தீவிரவாத தாக்குதலா? சந்தேகம் வருகிறது.. மமதா பானர்ஜி சரமாரி கேள்வி!
சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
சகொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிர தாக்குதல் நடைபெற்றது. இந்த மிக கொடூரமான தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள்.
இந்த தாக்குதல் காரணமாக நாடு முழுக்க பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.
சந்தேகம் அளிக்கிறது
மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா தாக்குதல் சந்தேகம் அளிக்கிறது. புல்வாமா தாக்குதல் சரியாக தேர்தலுக்கு முன் நடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மதக்கலவரத்தை உண்டாக்க பாஜக முயல்வதாக சந்தேகம் வருகிறது. இந்தியாவில் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்.
பெரிய கலவரம்
இந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அப்படி நடக்க கூடாது. யார் மீது யாரும் கோபம் கொண்டு தாக்குதல் நடத்த கூடாது. மக்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் அமைதி காக்க வேண்டும்.
5 வருடம்
இவ்வளவு நாள் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் வருகிறது என்பதால் எதோ நடவடிக்கை எடுக்க போகிறோம், போர் தொடுக்க போகிறோம் என்று பேசுகிறார்கள். 5 வருடமாக பாஜக அரசு பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தது.
இந்தியாவின் பாதுகாப்பு
இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவின் உளவுத்துறை சரியாக வேலை செய்யவில்லை. இருந்த போதிலும் கூட இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. அவர்கள் கொடுத்த தகவல்களையும் எச்சரிக்கையையும் மத்திய அரசு வேண்டும் என்றே புறந்தள்ளி இருக்கிறது.
எல்லாம் தெரியும்
மத்திய அரசு வேண்டும் என்றே இப்படி செய்துள்ளது. பிரச்சனை நடக்க போகிறது என்று தெரிந்து பாதுகாப்பு அளிக்காமல் வேடிக்கை பார்த்து இருக்கிறது. வீரர்கள் ஏன் எல்லோரும் தரை வழியாக செல்ல வேண்டும். அந்த நேரத்தில் ஏன் அத்தனை வாகனங்களை ராணுவத்தினர் உடன் அனுமதித்தார்கள். என்னுடைய செல்போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது
உதவி
இந்த தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி அளிக்கப்படும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளை அவர்களின் குடும்பத்திற்கு செய்ய இருக்கிறோம், என்று மமதா பானர்ஜி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.