அமியா போஸை நேரு உளவு பார்த்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: டுவிட்டரில் சு.சாமி தகவல்
டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நேதாஜியின் உறவினர் அமியா போசை உளவு பார்த்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி உளவுத்துறையினர் கிட்டத்தட்ட 20 வருடம் உளவு பார்த்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
In Netaji matter Congi tread carefully and not blame Patel for snooping. I have a file noting of Nehru directing the IB to follow Amiya Bose
— Subramanian Swamy (@Swamy39) April 13, 2015
நேருவுக்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசுகளும் இந்த உளவு பார்த்தலைத் தொடர்ந்து வந்ததாக உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதன்படி, கடந்த 1948ம் ஆண்டு முதல் 68ம் ஆண்டு வரை போஸ் குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு வந்த கடிதங்கள், அவர்கள் அனுப்பிய கடிதங்களை வேவு பார்த்துள்ளனர். மேலும் அவர்களை பின்னாலேயே நிழல் போல தொடர்ந்து சென்றும் உளவு பார்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
Netaji murder now unravelled must go further to include INA treasure chests, returned to India by Japan, that were stolen by Nehru
— Subramanian Swamy (@Swamy39) April 12, 2015
மேலும், நேதாஜியின் உதவியாளர், நேதாஜியின் உறவினர் அமியா நாத்துக்கு எழுதிய கடிதத்தை, புலனாய்வு அமைப்பு இடைமறித்து ஆய்வு செய்ததாகவும் பிரிட்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், நேரு, நேதாஜியின் உறவினர் அமியா நாத்தை உளவு பார்த்ததற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதோடு, நேதாஜி குடும்பத்தை உளவு பார்த்த விவகாரத்தில் படேலைக் குற்றம் சாட்டாமல் காங்கிரஸ் சாதுர்யமாக செயல்பட்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.
இதேபோல், தனது மற்றொரு டுவிட்டில், ‘நேதாஜியின் ஐ.என்.ஏ.யின் கருவூலப் பொருட்களை ஜப்பான் இந்தியாவிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டது. ஆனால், அவற்றை நேரு கொள்ளையடித்து விட்டார்' என சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், கடந்த ஜனவரி மாதம் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சுதந்திரத்துக்குப் பிறகான நவீன இந்தியாவில், சுயநலம்தான் முதலில்! தங்கள் பதவிகளுக்கன அச்சுறுத்தலாக நேதாஜியை காந்தியும் நேருவும் பார்த்தனர்' எனப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.