மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை - மனோகர் பரிக்கர்
கோவாவில் ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்
பனாஜி: கோவாவில் ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 21 இடங்கள் தேவை. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் இழுபறி நிலை நீடித்தது.
பாஜக ஆட்சியமைக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. 10 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பிற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.
அங்கு எம்.ஜி.பி., மற்றும் ஜி.எப்.பி., ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் தலா மூன்று எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவை பெற பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கோவா சென்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து மனோகர் பரிக்கரை முதல்வராக தேர்வு செய்தால் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.பி கட்சி கூறியிருந்தது. இந்த கட்சி கடந்த காலங்களில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
எம்.ஜி.பி.கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் மனோகர் பாரிக்கரை முதல்வராக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மேலும், கோவா பாஜக எம்எல்ஏக்களின் முடிவு பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தகவல்கள் வெளியானதுடன் தான் வகித்து வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. 22 ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவுடன் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மனோகர் பாரிக்கர் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. சிறிய கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டினார்.
மனோகர் பரிக்கர் கோவா முதல்வராகும் பட்சத்தில் 6 மாதங்களில் சட்சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும், தனது பெரும்பான்மையையும் நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.