பிஷப்புடன் கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள் என்னிடம் உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எம்எல்ஏ
பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி பிஷப்புடன் இருக்கும் வீடியோக்களும் போட்டோக்களும் தன்னிடம் உள்ளதாக கேரள எம்எல்ஏ பிசி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி பிஷப்புடன் இருக்கும் வீடியோக்களும் போட்டோக்களும் தன்னிடம் உள்ளதாக கேரள எம்எல்ஏ பிசி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முலக்கல் நேரில் ஆஜரானார்.
பலாத்காரம்
கோட்டயம் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பிஷப் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
ஏதும் சந்தேகம் உள்ளதா?
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கேரள மாநிலம் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் கன்னியாஸ்திரியை கடுமையாக விமர்சித்தார். கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா?
கடும் கண்டனம்
12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாகக் கூறுகிறார் என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ பிசி ஜார்ஜ்க்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பெரும் சர்ச்சை
பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், கோபத்தில் பேசியவார்த்தையாகும், பாலியல் தொழிலாளி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என்றார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிஷப் பிராங்கோ கைது
இந்நிலையில் பிஷப் பிராங்கோ முலக்கல் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ ஜார்ஜ் மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
வீடியோ போட்டோ உள்ளது
அவர் கூறியதாவது, இந்த சம்பவத்துக்கு பிறகு பிஷப் பிராங்கோவுடன், கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. இவ்வழக்கில் பிராங்கோவை சிக்கவைக்க போலீஸ் முயற்சி செய்கிறது.
ஆதாரங்களை கொடுப்பேன்
இப்போது கன்னியாஸ்திரி மகிழ்ச்சியாக இருக்கிறார். சட்டத்தால் தடைசெய்யப்பட்டதால், நான் இங்கே புகைப்படங்களைக் காட்டவில்லை. விசாரணை குழுவிடம் என்னுடைய ஆதாரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு எம்எல்ஏ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.