எனக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை தெரியுமே.. சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி
தமக்கு ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை தெரியும் என தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை தமக்கு தெரியும் என்று ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியும் அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திராணி, பீட்டர் முகர்ஜி இருவரும் நடத்திய ஐஎன்எக்ஸ் மீடியாதான் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்பது சிபிஐ வழக்கு. இதிலும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஷீனா போரா கொலை வழக்கு விசாரணைக்காக இந்திராணியும் பீட்டர் முகர்ஜியும் நேற்று டெல்லி நீதிமன்றத்துக்கு சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்திராணி முகர்ஜி, எனக்கு கார்த்தி மற்றும் சிதம்பரம் ஆகியோரை தெரியும். தற்போது போடப்பட்ட வழக்கு என்பது முதலீடுகள் தொடர்பானதாக கருதுகிறேன். இது பற்றி கூடுதல் தகவல் தெரியாது என கூறினார். மேலும் கார்த்தியுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுவது அபத்தமானது எனவும் இந்திராணி முகர்ஜி மறுப்பும் தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் தமக்கு தெரியும் என இந்திராணி முகர்ஜி கூறியிருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.