'சாவதற்கு முன்பாக சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்'; பத்திரிகையாளரிடம் சுனந்தா கூறிய கடைசி வார்த்தைகள்!
டெல்லி: சாகப்போகும் முன்பாக, சசி தரூர் பற்றிய உண்மைகளை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்திவிட்டுதான் சாவேன் என்று மறைந்த சுனந்தா புஷ்கர் பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பான விசாரணை, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வேகம் பிடித்துள்ளது.
விஷம் கொடுத்து கொலை
சுனந்தா, வெளிநாட்டு விஷத்தை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக டெல்லி மருத்துவமனை பிரேத பரிசோதனை ஆய்வு உறுதி செய்துள்ளது. எனவே மர்மசாவு என்ற கோணம் மறைந்து, கொலை என்ற கோணத்தில் டெல்லி போலீஸ் விசாரிக்கிறது.
ஐபிஎல் சூதாட்டம்
சுனந்தா சாவுக்கு முன்பாக, ஐபிஎல் சூதாட்டம், முறைகேடுகள் தொடர்பாக அதிகம் டிவிட் செய்து வந்தார். எனவே, ஐபிஎல் சூதாட்ட நிழலுலக தாதாக்களும் இவரது கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் டெல்லி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராகுல் கன்வால்
இந்நிலையில்தான் பிரபல ஆங்கில செய்தி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையாளர் ராகுல் கன்வாலிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணை தகவல்கள் கசிந்துள்ளன.
பேட்டிக்கு ஓகே
போலீசாரிடம் ராகுல் கன்வால் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சுனந்தா புஷ்கர் ஐபிஎல் முறைகேடுகள் குறித்து டிவிட் செய்து வந்ததை பார்த்து, அதுகுறித்து அவரிடம் சிறப்பு பேட்டி வாங்க திட்டமிட்டேன். இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதும், உடனடியாக நேர்காணலுக்கு சம்மதித்தார். அது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
உலகத்திற்கு காண்பிப்பேன் என்றார்
"நான் டிபி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எப்படியிருந்தாலும் சாகத்தான் போகிறேன். நான் சாவதற்கு என்பாக, சசிதரூர் குறித்து வெளி உலகத்திற்கு காண்பித்துவிட்டுதான் சாவேன்", என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் சுனந்தா இறந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு ராகுல் கன்வால் கூறியுள்ளார்.