நிச்சயமாக 30,000 வித்தியாசத்தில் நான் தோற்பேன்... இது காங் வேட்பாளரின் ' திட நம்பிக்கை'
ஜம்நகர்: தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இத்தனை வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என அதிமுக பேனர் வைத்து பிரச்சினையில் சிக்கிய விவகாரம் இங்கே காஞ்சிபுரத்தில் நடந்தது. ஆனால், அதற்கு நேர் மாறாக குஜராத் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தான் நிச்சயம் முப்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்பேன் என தெரிவித்துள்ளாராம்.
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல்வராக இருக்கும் குஜராத்தில் நேற்று முன்தினம் 26 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதில், அங்குள்ள ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யான விக்ரம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் விக்ரமின் உறவினரான பூனம் களமிறங்கினார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்த மறுதினமே தான் நிச்சயம் தோற்க இருப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளார் விக்ரம். இது தொடர்பாக தனது தொண்டர்களை அழைத்துப் பேசிய விக்ரம், ‘தான் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்பது உறுதி என்றும், எனவே தன் மீது யாரும் பந்தயம் கட்ட வேண்டாம்' எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.