எம்பி அகமது மரணத்தில் மர்மம்... அப்பாவை பார்க்க அனுமதிக்கவில்லை.. மகன் குற்றச்சாட்டு
எம்பி அகமதுவை மருத்துவமனையில் அவரது மகன் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற போது எம்பி அகமது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை அவரது மகன் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி இ. அகமது நாடாளுமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இதனிடையே, மறைந்த தன் தந்தையைப் பார்க்கச் சென்ற அகமதுவின் மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர், "என் தந்தையைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. அது என் உரிமை. எப்படி நான் பார்க்கக் கூடாது என்று அனுமதி மறுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த அகமதுவின் மைத்துனர் பேசுகையில், மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளிக்க விரும்பினார்கள் என்றும் ஆனால் அது பற்றி எங்களிடம் கூறி அனுமதி பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த எம்பி அகமதுவின் மகனுக்கே அவரது உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.