நான் கராச்சியில் பலமுறை தாவூத்தை சந்தித்தேன்.. அதிரவைக்கும் பாக். பத்திரிகையாளரின் வாக்குமூலம்!
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை கராச்சியில் உள்ள பங்களாவில் தாம் சந்தித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆரீப் ஜமால் அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்தான் சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதலாவது பயங்கரவாத தாக்குதல். இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான். அவனுக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸை பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டது.
ஆனால் தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் கூறிவருகிறது. இந்தியாவோ தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்து ஒப்படைக்க வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் தாவூத் இப்ராகிமை தாம் சந்தித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆரீப் ஜமால் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவரது பேட்டியில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தாவூத்துடன் சந்திப்பு
தாவூத் இப்ராகிமை பற்றி பாகிஸ்தான் ஊடகங்களில் அவ்வளவாக செய்திகள் வெளிவருவது இல்லை. ஆனால் ஏராளமான பாகிஸ்தானியர்கள் கராச்சியில் சுதந்திரமாக வாழும் தாவூத்தை சந்தித்து வருகின்றனர். கராச்சியில் தாவூத்தை சந்திப்பதும் எளிதானதுதான்..
தாவூத்தை சந்திப்பதற்காக நண்பர் ஒருவர் மூலமாக பேட்டிக்காக நேரம் வாங்கியிருந்தேன். நானும் சந்தித்தேன்.. ஆனால் பேட்டி எடுக்கவில்லை. கராச்சியில் தாவூத்துடன் பலரும் வர்த்தக ரீதியான தொடர்புகளையும் வைத்துள்ளனர். பாகிஸ்தானிலேயே அதிக சொத்துகளை வைத்திருக்கும் நபர் தாவூத் என்று கூட என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
தாவூத் தம்பி...
நான் கராச்சியில்தான் அவரை சந்தித்தேன்.. அதற்கு மேல் அந்த சந்திப்பு பற்றி விரிவாக பேச முடியாது. நான் பாகிஸ்தானைவிட்டு 2007ஆம் ஆண்டு வெளியேறிவிட்டேன். தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் லாகூரில் எனது பக்கத்து வீட்டுக்காரர்தான்.
லாகூரில் மாலைநேரத்தில் வாக்கிங் போகும்போது பொதுமக்கள் திடீரென தடுக்கப்படுவார்கள்.. அப்போதுதான் யாருக்காக இதை செய்கிறார்கள் என விசாரித்த போது அனீஸ் இப்ராகிமுக்காக என தெரிந்து கொண்டேன்.. நான் அவரை சந்தித்தேன்.. அப்போது ஏராளமான வைர மோதிரங்களை அவர் அணிந்திருந்தது நினைவில் இருக்கிறது..
பகிரங்கப்படுத்த முடியாது..
தாவூத்தை நான் சந்தித்த போதெல்லாம் அது எளிதான ஒன்றாகத்தான் இருந்தது. யாரேனும் அவரை சந்திக்க வருவதாக இருந்தால் பாதுகாவலர்களிடம் சொல்லி உள்ளே அனுப்புமாறு கூறிவிடுவார்.. அவரைப் பற்றி நான் மட்டுமல்ல ஏராளமான பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.
நான் அவரை சந்தித்த போது நிறைய விஷயங்களைப் பற்றி பேசியுள்ளோம்.. ஆனால் அதை பகிரங்கப்படுத்தப்போவதில்லை என அவரிடம் உறுதி அளித்திருக்கிறேன்.
முகத்தில் சர்ஜரி இல்லை..
1980களில் தாவூத் எப்படி இருந்தாரோ அந்த முக அமைப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. அவர் முகத்தை சர்ஜரி செய்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. தாவூத்தை சந்தித்த போது குடும்பத்தினர் யாரும் அங்கே இல்லை. நிறைய பணியாளர்களும் பாதுகாவலர்களும்தான் இருந்தனர்.
பாக். ராணுவ ஆதரவு
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இல்லாமல் தாவூத் இப்ராகிமால் எப்படி பாகிஸ்தானில் வாழ்ந்துவிட முடியும்? தாவூத்தும் அனீஸும் வேறு இடங்களில் வேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.. ஆனால் என்னுடைய சந்திப்புகளில் அவர்களது சொந்த பெயர்களைத்தான் பயன்படுத்தினோம்.
இவ்வாறு ஆரீப் ஜமால் கூறியுள்ளார்.