விமான நிலையத்தில் ரகளை..மன்னிப்பு கேட்க முடியாது..தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி தெனாவட்டு பதில்
விமான நிலைய அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறியுள்ளார்.
விசாகபட்டினம்: விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.
தெலுங்குதேசம் கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி நேற்று காலை இன்டிகோ விமானத்தில் ஹைதராபாத் செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தார். காலை 8.10 மணிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்ல டிக்கெட் புக் செய்திருந்த அவர், 28 நிமிடங்கள் தாமதமாக வந்தார்.
இதனால் விமான நிறுவன அதிகாரிகள், கவுன்ட்டர் மூடப்பட்டுவிட்டதால் நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அடுத்த விமானத்தில் பயணம் செய்யலாம் என்றனர். இதைத் தொடர்ந்து அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோபத்தில் அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து இன்டிகோ விமான நிறுவனங்களில் அவர் பயணிக்க தடை விதித்தது அந்த நிறுவனம். இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, கோ ஏர், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்டாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பேசிய திவாகர் ரெட்டி, விமான நிலையத்தில் எந்த பொருட்களையும் சேதப்படுத்தவில்லை. யார் மீதும் தாக்குதல் நடத்த வில்லை. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு வேறு ஒரு விமான நிலையத்திற்கு இதே போல் தாமதமாக வந்த திவாகர் ரெட்டி அங்கும் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.