15 மாதம்- 3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு.. தெருவில் போறவங்க சொல்றாங்கன்னா... கொந்தளிக்கும் கமல்நாத்
போபால்: 15 மாதங்களில் 3 முறை பெரும்பான்மையை தாம் நிரூபித்திருப்பதாகவும் தெருவில் நின்று விமர்சிப்பவர்களுக்காக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கொந்தளித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக அக்கட்சி எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு ராஜினாமா செய்ய வைத்துள்ளது பாஜக. இதனையடுத்து முதல்வர் கமல்நாத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை முன்வைத்து சட்டசபை நடவடிக்கைகளை அம்மாநில சபாநாயகர் ஒத்திவைத்திருக்கிறார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்து வாதாடி வருகின்றனர். இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
ஆளுநருக்கு என்ன அதிகாரம்?
இவ்வழக்கில் சபாநாயகர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட முடியாது. கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதை வைத்து ஆளுநர் முடிவு செய்திருக்கிறார்? ஆளுநர் அவராகவே முடிவு செய்து கொள்ள முடியுமா? சட்டசபையை கூட்டுவது தொடர்பான ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் குறைவு என வாதாடினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை
முன்னதாக விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், குதிரைபேர அரசியலை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அதனால்தான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறோம் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகர் முன்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களது தரப்பினர் ஆஜராக விரும்புவதாக கூறினார்.
3 முறை பெரும்பான்மை நிரூபிப்பு
இதனிடையே டிவி ஒன்றுக்குப் பேட்டியளித்த முதல்வர் கமல்நாத், 15 மாதங்களில் 3 முறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். தெருவில் போகிறவர் ஒருவர் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறினால் உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா? அப்படி பெரும்பான்மையை நாங்கள் நிரூபிக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரட்டும் என்றார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பவர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றும் கமல்நாத் கூறினார்.
கமல்நாத் சார்பாக கபில்சிபல்
இந்நிலையில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. கமல்நாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். அப்போது, எந்த ஒரு நீதிமன்றமும் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்ய முடியாது. பெங்களூருல் இருக்கும் அதிருப்தி எம்..எல்.ஏக்கள் பிணைக் கைதிகளாக இல்லையெனில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதானே? ஏன் அதை செய்யவில்லை? எதுதான் அவர்க்ளைத் தடுத்து கொண்டிருக்கிறது? அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முதல்வர் தயாராக இருக்கிறார். பெங்களூருவில் இருந்து முதலில் மத்திய பிரதேசத்துக்கு அந்த எம்.எல்.ஏக்கள் வரவேண்டும் என வாதிட்டார்.