மானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்... தலைமறைவானதாக கூறப்பட்ட டிரைவர் பரபரப்பு தகவல்
டெல்லி: அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், சல்மான் கான் மானை சுட்டுக்கொன்றதை பார்த்ததாக அந்த வழக்கின் சாட்சியான கார் டிரைவர் பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ம் ஆண்டு 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சல்மான் கான் துப்பாக்கியால் சுட்டதில் அரிய வகை மான் இனமான சின்காராஸ் மற்றும் பிளாக்பக்ஸ் என்ற வகைளைச் சேர்ந்த 3 அரிய மான்கள் கொல்லப்பட்டன. இந்த மான் வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி வேட்டையாட தடை செய்யப்பட்ட விலங்காகும். இதையடுத்து சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு சல்மானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சல்மான் கான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி சல்மான் கானை விடுவித்தது. சல்மான் கான் மான் வேட்டையாட செல்லும் போது பயன்படுத்திய ஜீப்பின் ஓட்டுநர் இந்த வழக்கின் ஒரே சாட்சியாக இருந்தார். ஆனால், ஹரிஸ் துலானி என்ற அந்த ஓட்டுநர் 2002 ஆம் ஆண்டு முதல் தலைமைறைவாகிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சல்மான் கான் விடுவிக்கப்பட்ட இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் இன்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு ஹரிஷ் துலானி பேட்டி அளித்துள்ளார். அதில், நான் ஒரு போதும் தலைமறைவாகவில்லை எனவும், அச்சுறுத்தல் காரணமாக வெளியே வரவில்லை என கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், " 18 ஆண்டுகளுக்கு முன் நான் மாஜிஸ்திரேட்டு முன் அளித்த வாக்குமூலத்தின் நான் உறுதியாக உள்ளேன். சல்மான் கான் காரை விட்டு இறங்கி மானை சுட்டார்.
எனக்கும் எனது தந்தைக்கும் பல மிரட்டல் விடுக்கப்பட்டதால் நான் அச்சத்தில் இருந்தேன். ஒருபோதும் தலைமைறைவாகவில்லை. அச்சத்தின் காரணமாக ஜோத்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். நாங்கள் பாதுகாப்பு கோரினோம், ஆனால், அது வழங்கப்படவில்லை.எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தால், நான் எனது வாக்குமூலத்தை வழங்கியிருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
சல்மானுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்ட நிலையில், முக்கிய சாட்சியான கார் ஓட்டுநர் இவ்வாறு கூறியிருப்பது சல்மானுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.