காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்க உமா பாரதி உண்ணா விரதம் ஸ்டன்ட்?
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கர்நாடக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் தரும் நிலையில் கர்நாடகா இல்லை என்று பாடிய பல்லவியையே பாடியது கர்நாடகா. உச்சநீதிமன்றமே கூறிவிட்டது.., அதை செயல்படுத்துவது மட்டுமே கர்நாடக அரசின் பணி என்று சுட்டிக் காட்டியது தமிழகம்.
வேண்டுமென்றால் நிபுணர் குழுவை அமைத்து, இரு மாநில நீர் இருப்பையும் சோதித்து பாருங்கள் என இழுபறிக்காக ஒரு ஐடியாவை கொடுத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. முதலில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீரை திறங்கள், பிறகு நிபுணர் குழுவை அமையுங்கள் என்றது தமிழகம்.
வழி மொழிந்த உமா பாரதி
இறுதியில் நாட்டாமையாக உட்கார்ந்திருந்த உமா பாரதியோ, நிபுணர் குழுவை அமைக்கலாம், இதுதான் எனது பரிந்துரை என்று, கர்நாடக கோரிக்கையை அப்படியே வழி மொழிந்தார். ஆனால் தமிழகம் இதற்கு தலையாட்டாததால் பெரும் கோபம் கொண்டார் உமா பாரதி.
உண்ணா விரதம் இருப்பாராம்
நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது அந்த கோபம் வெளிப்பட்டது. "என்னால் இரு மாநிலங்களையும் சமாதானப்படுத்தி காவிரி விவகாரத்தில் தீர்வை எட்ட வைக்க முடியவில்லை. தீர்வுக்காக நான் உண்ணாவிரதம் இருக்கவும் தயார்" என்று ஒரே போடாக போட்டார் அவர்.
அதிகாரத்தை பயன்படுத்துக
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீரை திறங்கள் என கர்நாடகாவை பார்த்து, அதிகார தோரணையில் கூற வேண்டிய மத்திய அமைச்சரோ, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பரபரப்பு அரசியல் வழியை தேர்ந்தெடுத்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு வேதனையான விஷயம்தான்.
மேலாண்மை வாரியம் ரெடியாகிறது
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சசி சேகர் அளித்த ஒரு பேட்டிக்கும், உமா பாரதியின் இந்த ஸ்டன்ட்டுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறார்கள் தமிழக விவசாயிகள். ஏனெனில், சசிசேகர் அளித்த பேட்டியின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம் என்று கூறினார். 4 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் அந்த பணிகளை செய்துவருவதாக அவர் கூறினார். இது உண்மையிலேயே, தமிழக விவசாயிகளுக்கு இனிப்பு செய்தி.
திசைதிருப்புகிறாரா அமைச்சர்
ஆனால், உமா பாரதியோ காவிரி பிரச்சினையை தீர்க்க உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி குட்டையை குழப்புகிறார். மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டால், காவிரி பிரச்சினை தானாக தீர்ந்துவிடப்போகிறது. அதை அமைப்பதை மேற்பார்வையிட்டு முடுக்கிவிட வேண்டிய துறையின் அமைச்சர்தான் உமா பாரதி. இந்த நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என்பது, கர்நாடகாவை திருப்திப்படுத்தவா? மேலாண்மை வாரிய விவகாரத்தை திசை திருப்பவா? வருங்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.